
posted 15th May 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நிந்தவூரில் கவிஞர் முஜாமலாவின் இரு நூல்கள் வெளியீடு
நிந்தவூரைச் சேர்த்த கவிஞர் முஜா மலாவின் இரு கவிதைத் தொகுப்பு நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்றது.
கடந்த 13 வருடங்களுக்கு மேலாக கவிதை உலகில் புகுந்து எழுதிக்கொண்டிருக்கும் பெண் கவிஞரான முஜாமலாவின் முதல் முயற்சியாக நூலுருவாக்கம் பெற்றிருக்கும் அவரது “நீதம்” மற்றும் “ரூஹின் சிறகுகள்” எனும் கவிதைத் தொகுப்பு நூல்களின் வெளியீட்டு விழாவே சிறப்புற நடைபெறவுள்ளன.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு, தந்திரோபாய திட்டமிடல் பிரிவின் பணிப்பாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி. எப்.எச்.ஏ. ஷிப்லி தலைமையில், நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் வெளியீட்டு விழா இடம்பெறும்.
விழாவில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சாரபீட மொழித்துறை சிரேஷ்ட பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வதுடன், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீட மொழித்துறை விரிவுரையாளர் எம். அப்துல் றஸாக், துறைத்தலைவரும், சமூகவியல் பேராசிரியருமான, பேராசிரியர் கலாநிதி டாக்டர். எஸ்.எம். அய்யூப், இலக்கிய செயற்பாட்டாளரும் தாதிய உத்தியோகத்தருமான தி. லலிதகோபன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரீ.எம். றிம்ஷான், மாவட்ட கலாச்சார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக், கலாபூஷணம் பாவேந்தல் பாலமுனை பாறூக், நிந்தவூர் கலை, கலாச்சார பேரவையின் தலைவர் டாக்டர். ஏ.எம். ஜாபிர், பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன், இலக்கிய செயற்பாட்டாளர் றியாஸ் குரானா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்வர்.
“வானம்பாடி” எனும் புனைப்பெயரையும் கொண்ட கவிஞர் முஜாமலாவின் “நீதம்” நூல் 54 கவிதைகளைக் கொண்ட தொகுப்பாகவும், “ரூஹின் சிறகுகள்” நூல் 45 கவிதைகளைக் கொண்ட தொகுப்பாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)