
posted 9th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நிகழ்நிலை காப்பு சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பணம்
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தின் திருத்தச் சட்டமூலம் நேற்று (08) வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த சட்டமூலத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சார்பில் சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த சபையில் சமர்ப்பித்தார்.
நிகழ்நிலை காப்பு சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், 2024 ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தற்போது வலுவுடையதாக உள்ளது.
இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முன்னர் துறைசார் நிபுணர்கள் சட்டமூலத்தின் ஒருசில பிரிவுகள் பற்றிய திருத்தங்களை முன்மொழிந்திருப்பினும் குழுநிலை விவாதத்தின்போது அவ்வாறான திருத்தங்களை சட்டமூலத்தில் சேர்த்துக் கொள்வதற்கு முடியவில்லை.
இதற்கமைய, இந்தத் திருத்தங்களை உள்ளடக்கி 2024 ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்பு சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு சட்டமூலத்தை தயாரிப்பதற்காக 2024.02.12 அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதற்கிணங்க, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்துக்கு சட்ட மா அதிபரின் ஒப்புதல் கிடைத்தது. இதையடுத்து, அந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க கடந்த ஜூலை 22ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கமைய நேற்று வியாழக்கிழமை குறித்த திருத்தச் சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)