
posted 14th May 2022
“தேசிய ரீதியாக நிகழப்போகும் மாற்றங்களின் போது தமிழர்களின் அரசியல் உரிமை தொடர்பாக தமிழ்த் தலைமைகள் முன்னுரிமையுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட முன்வர வேண்டும்”
இவ்வாறு, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா மன்றம்) இரா. துறைரெத்தினம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் புதிய அரசியல் நிலமைகள் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றங்கள் என்பது வன்முறை இல்லாமல் நிகழ வேண்டும்.
முழு இலங்கையிலும் அனைத்து இன சமூகமும் தற்போது எதிர்நோக்கிய பிரச்சனைகளாக, பொருட்களுக்கான விலையேற்றம், மேலும், பால்மா, உபஉணவுப் பொருட்கள், அரிசி, நெல் பருப்பு, தானிய வகைகள் தட்டுப்பாடும் விலை அதிகரிப்பும், உரம் (யூரியா), கிருமிநாசினி கிடைக்காதிருப்பதும், டீசல், மண்ணெண்ணைய், பெற்றோல், எரிவாயுவுக்குத் தவம் கிடக்கும் நிலைமையும், மருத்துவப் பொருட்கள் இல்லாதிருப்பதும், கட்டிடப் பொருட்களின் தட்டுப்பாடுகளும், விலையேற்றங்களும் மக்களை வாட்டி வதைக்கின்றன.
இது முழு இலங்கைக்கும் ஆறு மாதமாக ஏற்பட்ட விடயமாகும். ஆனால் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக வடக்கு கிழக்கில் ஒரு பொருளாதாரத் தடை அரசால் ஏற்படுத்தப்பட்டதை தமிழ் மக்கள் இன்னும் மறந்து போகவில்லை. மூவின மக்களும் ஆறுமாத காலமாக குறிப்பாக பெரும்பான்மை சிங்கள மக்கள் நேரடியாககப் பாதிக்கப்பட்டதால் மாற்றத்திற்கான ஜனநாயகப் போராட்டங்கள் எழுச்சி பெற்றது.
எது எப்படியோ வடக்கு கிழக்கு மக்களும் பொருளாதாரத்தடை, அரசியல் பிரச்சினைகள் 19ஆவது, 20ஆவது சட்டப் பிரச்சினைகள் தொடர்பாக ஒவ்வொரு தமிழர்களும் தங்களால் இயன்ற வன்முறையற்ற மானசிகமான உதவிகளை செய்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் இதே போராட்டத்தை தமிழர்கள் மட்டும் செய்திருந்தால் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டும், பலர் காணாமலும், அடையாளம் தெரியாமலும் தெருத் தெருவாக உறவினர்களைத் தேட வேண்டிய நிலை எமது சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும்.
மக்களின் போராட்டம் வெற்றியளித்துள்ளது. வெற்றி அடையும் வெகுஜன ரீதியான ஜனநாயகப் போராட்டம் வன்முறை இல்லாமல் ஒருமாத காலமாக நிகழ்த்தப்பட்டதும், சர்வதேச ரீதியாகவும், தேசிய ரீதியாகவும் அனைத்தின மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர்.
இறுதி நாட்களில் பிரதமர் மஹிந்த அவர்களின் குண்டர் படைகள் ஆரம்பித்த வன்முறை முடிந்த பாடில்லை. ஆனால் வடக்கு கிழக்கில் தமிழர்கள் மனித நேயத்தையும், ஜனநாயகத்தையும், பிறரையும் ஏற்றுக் கொண்டு மிகவும் அமைதியான முறையில் இந்த நாட்களை கடந்து வந்ததென்பது ஒவ்வொரு தமிழனும் மனிதநேயமிக்கவர்கள் என்பதை சர்வதேசத்திற்கும், தேசத்திற்கும், மூவின மக்களுக்கும் எடுத்துக் காட்டாகவும், அடையாளமாகவும் இருந்தது. இது ஒரு வரலாற்றுத் தடமாகும். இவ்வரலாறு எழுதப்பட்டு விட்டன, எழுதப்படும்.
குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் விரும்பியோ விரும்பாமலோ மஹிந்தவின் அருவருடிகள் தேர்தலிலும், அரசியலிலும், தொழில் ஈடுபாட்டிலும் ஏனைய சில வியாபரங்களிலும் கடந்த காலத்தில் வன்முறையை மறைமுகமாக பிரயோகித்தாலும், மாவட்ட மக்கள் அமைப்புகள், கட்சிகள் வன்முறையற்ற ஜனநாயகத்தை நிலைநாட்டிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய செயல் வடிவங்கள், வன்முறை இல்லாமல் ஜனநாகயகத்திற்கு மதிப்பளித்து மனதநேயப் பண்புகளுடன் நடந்து கொள்வதென்பது அனைவராலும் பாராட்டப்படுகின்றன. மதிக்கப்படுகின்றன. போற்றப்படுகின்றன. ஒரிரு சம்பவங்கள் தட்டுத்தடுமாறினாலும் எமது சமூகம் வன்முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
இனிமேலாவது திருந்தி நடந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதோடு, கொழும்பில் தேசிய ரீதியாக நிகழப் போகும் மாற்றங்கள் பொருளாதார விடயம், அரசியல் சார்ந்த விடயங்கள், 19ஆவது, 20ஆவது திருத்தச் சட்டங்கள் இத்தோடு தமிழர்களின் அரசியல் உரிமை தொடர்பாகவும் அமுல்படுத்துவதற்கு தமிழ்த் தலைமைகள் பேச்சு வார்த்தையில் ஈடு பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY