
posted 2nd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
துப்பாக்கிகளுடன் கைதான மௌலவி ரி. ஐ. டியிடம் ஒப்படைப்பு
மட்டக்களப்பு, வாழைச்சேனையில் இரண்டு ரி - 56 ரக துப்பாக்கிகளுடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட மௌலவி, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
வாழைச்சேனை, நாவலடி சந்தியில் செவ்வாய்க்கிழமை இரவு 8. 50 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது மௌலவியாக பயிற்றுவிக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர் இரண்டு ரி - 56 ரக துப்பாக்கிகளுடன் அரலகங்வில பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் மௌலவியாக பயிற்சி பெற்ற ஓட்டமாவடியைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபர், இரண்டு ரி - 56 துப்பாக்கிகள், 59 தோட்டாக்கள், இரண்டு மகசின்கள், ஒரு வாள் மற்றும் ஒரு தொலைநோக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் ஒரு ரி - 56 ரக துப்பாக்கி, 29 தோட்டாக்கள் மற்றும் ஒரு மகசின் என்பன இருந்தன. விசாரணைகளின் போது சந்தேகநபரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அருகில் உள்ள அவரது சகோதரரின் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் மேலும் ஒரு ரி - 56 துப்பாக்கி, 30 தோட்டாக்கள், ஒரு மகசின் மற்றும் வாள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்ததன் பின்னணி குறித்து ஆராய்வதற்காகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவும் சந்தேகநபர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)