திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரம் நிந்தவூர் பிரதேச சபையிலும் கண்டனம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வரலாற்றுச் சிறப்பு மிக்க புராதனமான இந்து மக்களின் முக்கிய தலமான திருகோணமலை, திருக்கோணஸ்வரர் ஆலயம் பௌத்த, சிங்கள ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதையும், தொல்பொருள் என்ற போர்வையில் எடுக்கப்படும் இதற்கான மறைமுக நடவடிக்கைகளைக் கண்டித்தும் நிந்தவூர் பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இத்தகைய செயற்பாடுகளைத் தொடர்விடாது தடுத்து நிறுத்துவதுடன், இந்த முக்கியத்துவமிக்க ஆலயப் பிரதேசத்தை புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி ஆவன செய்ய வேண்டுடமெனவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒரேயொரு தமிழ் உறுப்பினரையும், பெரும்பான்மையான (12 பேர்) முஸ்லிம் உறுப்பினர்களையும் கொண்ட நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் மேற்படி தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டள்ளமை தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டானது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

நிந்தவூர் பிரதேச சபையின் அக்டோபர் மாதத்திற்கான 4 ஆவது சபையின் 55ஆவது கூட்ட அமர்வு தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையில் சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது சபையின் ஒரேயொரு தமிழ் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான கே. சுதாமதி திருகோணமலை, திருக்கோணஸ்வரர் ஆலய, பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு தொடர்பான கண்டனப் பிரேரணையை சபையில் முன்மொழிந்தார்.

உறுப்பினர் சுதாமதி பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றுகையில், பின்வருமாறு கூறினார்.

“நாயன்மார்களின் பாடல் பெற்ற சைவ மக்களின் முக்கிய புராதன தலமான திருகோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் இன்றைய நிலமை குறித்து முக்கிய கவனம் இன்று திரும்பியுள்ளது.

பௌத்த சிங்கள பேரினரவாதம் இந்த ஆலய வளாகத்தின் புனிதத் தன்மைக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நிலையில் ஆக்கிரமிப்பு செயற்பாடுகளையும் தொடர்வதாகத் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

இதன் ஓர் வெளிப்பாடாக தொல்பொருள் என்றபோர்வையில், ஆலயத்தின் கட்டுமானப் பணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

வெளிமாட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவரின் ஆக்கிரமிப்புக் கடைகளால் அங்கு ஆலயத்தின் புனிதத் தன்மைக்கும் தொடர்ச்சியான பாதிப்பும் ஏற்பட்டு வருகின்றது.

எனவே, திட்டமிட்ட இத்தகைய பேரினவாத செயற்பாடுகளைக் கண்டிப்பதுடன், பௌத்த, சிங்கள ஆக்கிரமிப்புடனான கபளீகர செயற்பாடுகளை தடுத்து நிறுத்தவும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களைக் கோர வேண்டும்” என்றார். தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் பிரேரணை மீது உரையாற்றுகையில், “சிறுபாண்மை சமூகங்கள் மீதான நெருக்குதல்களும், அடக்குமுறைகளும், கபளீகர செயற்பாடுகளும் நாட்டில் குறிப்பாக வடக்கு, கிழக்கில் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

நாட்டில் இவ்வாறான செயற்பாடுகளை பேரினவாத வெறி கொண்ட ஒரு கூட்டம் முனைப்புடன் முன்னெடுக்கின்றது. இத்தகைய செயற்பாடுகளைத் தொடர அனுமதிக்க முடியாது.

சிறுபான்மை சமூகங்கள் ஒன்றுபட்டு இத்தகைய அடக்கு முறைகள், அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.

பிரதி தவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வை உறுப்பினர்களான சட்டத்தரணி, ஏ.எல். றியாஸ் ஆதம், ஏ. அஸ்பர், எம்.ஐ. மஸ்பிகா ஆகியோரும் பிரேரணையை ஆதரித்து உரையாற்றியதுடன் சபையில் தீர்மானம் ஏகமனதாகவும் நிறைவேற்றப்பட்டது.

திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரம் நிந்தவூர் பிரதேச சபையிலும் கண்டனம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY