
posted 31st August 2021
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரானிலி டீமெல் மாவட்ட செயலகத்தில் செவ்வாய் கிழமை (31.08.2021) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்தில் இம் மாவட்டத்தில் கொவிட் தொற்றால் இறப்பவர்களின் உடல்களை எரிப்பதற்கான கட்டட நிர்மாணப்பணி உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் அரசாங்க அதிபர் இக் கலந்துரையாடலில் ஏற்கனவே இத் திட்டங்கள் எடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது இத் திட்டத்தை உடன் முன்னெடுக்க வேண்டிய கட்டாய நிலைப்பாடு ஏற்பட்டுள்ளது. இக் கலந்துரையாடல்களில் பிரதேச சபைகளின் தவிசாளர்கள். செயலாளர்கள் உட்பட இவை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் இவ்விடயத்தைப் பற்றி கலந்துரையாடுகையில், அரச அதிபர் கூறியதாவது, இந்நோயினால் மரணிப்பவர்களில் கிறீஸ்த்தவர்களுடையதையும், இந்துக்களுடையதையும் எரிப்பதற்காக வவுனியாவிற்கும், முஸ்லீம் சமயத்தவர்களுடையதை கிழக்கு மாகாணத்திலுள்ள ஓட்டமாவடிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.
ஆனால் தற்பொழுது வவுனியாவில் சடலங்களை எரிக்கும் இடத்துக்கு தற்பொழுது முல்லைத்தீவு. கிளிநொச்சி ஆகிய பகுதிகலிருந்தும் சடலங்கள் வருவதால் வவுனியாவில் சடலங்கள் எரியூட்டும் இடத்தில் நெருக்கடிகள் அதிகம் காணப்படுவதுடன் அதன் இயந்திரமும் தற்பொழுது பழுதடைந்த நிலைக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மன்னாரிலிருந்து சடலங்களை வவுனியாவுக்கு கொண்டு வருவதற்கு முன் தங்களின் அனுமதியை பெற்ற பின்பே கொண்டு வரும்படி சுகாதார சேவைகள் திணைக்களத்துக்கு வவுனியாவிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே மன்னாரில் இறந்தவர்களை மன்னாரிலேயே எரிப்பதற்கான உடனடியான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்குடன் இது விடயமான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது எனவும், இதற்கமைய 27 மில்லியன் ரூபா செலவில் மன்னார் பொது மயானத்தின் ஒரு பகுதியில் இதற்கான கட்டிடம் அமைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி உதவிகளை மன்னார் நகர சபை, பிரதேச சபைகள். பாராளுமன்னற உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் உதவிகளைப் பெற்று இக் கட்டிடத்தை அமைப்பது எனவும், இதற்கான அடிக்கலை வருகின்ற வாரம் நாட்டுவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்வது எனவும் இக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ