
posted 11th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் நான்காம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று ஞாயிறு (10) இடம்பெற்ற போது மேலும் சில எச்சங்கள் மீட்கப்பட்டன.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (10) நான்காம் நாள் அகழ்வுப் பணிகள் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி ஆகியோரால், சட்டத்தரணி எஸ். துஸ்யந்தி ஆகியோரின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த மனிதப் புதைகுழி இரண்டாம் நாள் அகழ்வின்போது துப்பாக்கிச் சன்னங்கள் என சந்தேகிக்கப்படும் உலோகத் துண்டுகள், துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஆடைகள் என்பன தடயப்பொருட்களாக மீட்கப்பட்டிருந்தன.
மூன்றாம் நாள் அகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் உடையது என சந்தேகிக்கப்படும் உடல் எச்சங்கள் இரண்டு முழுமையாக மீட்கப்பட்டதுடன், குறித்த உடல்களுடன் காணப்பட்ட ஆடைகளில் சில இலக்கங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று நான்காவது நாள் அகழ்வின்போது சில முக்கிய தடயப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் இது தொடர்பாக அதிகாரபூர்வமாக கருத்து தெரிவிப்பதற்கு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்றும் குறித்த மனிதப் புதைகுழி வளாகத்தை பார்வையிடுவதற்கென யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று வருகை தந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)