
posted 11th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
குடியிருப்பு காணிகளை அபகரிக்க வேண்டாம் - கப்பல்துறை மக்கள் கவனவீர்ப்பு போராட்டம்
திருகோணமலை, மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை பகுதியில் உள்ள மக்கள் தங்கள் காணிகளை அபகரிக்க வேண்டாம் எனக் கோரி நேற்றுச் (10) சனிக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'வேண்டாம் வேண்டாம் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் வேண்டாம், எங்களுடைய விவசாய காணிகள் எங்களுக்கு வேண்டும் போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் கவனவீர்ப்பில் ஈடுபட்டனர்.
இலங்கை துறைமுக அதிகார சபையினர் தங்கள் பகுதிக்குள் வந்து விவசாயம் செய்ய விடாது தடுத்து நிறுத்துவதுடன் எந்தவிதமான கட்டடமோ குடியிருப்புகளோ இருக்கக்கூடாது என்றும் அவற்றை அகற்றுமாறும் வற்புறுத்துவதாவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
குறித்த கப்பல் துறை கிராமத்தில் சுமார் 1200இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாட ஜீவனோபாயமாக மீன்பிடி, விவசாயத்தை கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
சுமார் 150 ஏக்கர் அளவில் விவசாய காணிகள் காணப்படுகின்றன. இங்கு 1977இல் மீள்குடியேறிய மக்களை தற்போது வெளியேறுமாறு துறைமுக அதிகார சபையினர் கூறிவருகின்றனர்.
அப்போதைய கப்பல் துறை, துறைமுகங்கள், புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சராக செயல்பட்ட மறைந்த எம். எச். எம்.அஷ்ரப்பினால் மக்கள் மீள்குடியேற்றப்பட்டனர் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
நாங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வாழ்ந்து வருகிறோம். துறைமுக அதிகார சபையினர் எங்களை வெளியேறுமாறு அடிக்கடி தொல்லை கொடுக்கின்றனர். எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் எனவும் கவனவீர்ப்பில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
எனவே, இப் பிரதேச மக்களின் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை வழங்கி வாழ வைக்குமாறும் வலியுறுத்தினர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)