
posted 2nd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கிழக்கில் அமைய ஊழியர்களை நிரந்தரமாக்கும் பணி ஆரம்பம்
கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் அமைய ஊழியர்களை நிரந்தரமாக்கும் பணியை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் முன்னெடுத்துள்ளார்.
இதன் ஓர் அங்கமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் தவிசாளர்களை ஆளுநர், மாவட்டம் மாவட்டமாக சந்தித்து வருகின்றார்.
அந்த வகையில் அம்பாறை மாவட்டத்துக்கான சந்திப்பு திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணன், அம்பாறை மாவட்ட உதவி உள்ளூராட்சி ஆணையாளர் கமல் நெத்மினி உள்ளிட்ட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இதன்போது, காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் "கொரோனா காலகட்டத்தில் எமது ஊழியர் ஒருவர் மரணமடைந்தார். இரண்டு குழந்தைகளின் தந்தையான அவர் திடீரென மரணமடைந்ததால் அவரது குடும்பம் நிர்க்கதியானது. இதன் காரணமாக அவரது மனைவி, தற்காலிகமாகப் பணிபுரிய உதவினோம். இன்றும் அவர் பணியாற்றி வருகிறார். முடிந்தால் அவரை நிரந்தர ஊழியராக இணைத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், எங்களது பதவிக்காலம் முடிந்தாலும் ஆளுநர் எங்களை அரவணைத்து எங்களை உள்வாங்கி இந்தப் பணிகளை முன்னெடுத்துச் செல்வது வரவேற்புக்குரியது என்றார். இதற்குப் பதிலளித்த ஆளுநர், இது உங்கள் காலத்தில் உங்களால் ஆரம்பிக்கப்பட்ட விடயம். ஆகவே, தான் உங்கள் முன்னிலையில் இவர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்ற சிந்தனையில் உங்களை அழைத்திருக்கின்றேன்.
ஆகவே அதற்கான வேலைகள் இன்னும் இரண்டு வாரத்தில் நடைபெறும் என்று கூறினார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)