
posted 23rd July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு எதிராக மன்னாரில் பொது மக்கள் போராட்டம்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை மற்றும் அந்தோனியார்புரம் பகுதியைச் சேர்ந்த ஏழை விவசாயிகள் தங்களுக்கான காணி உரிமையை கோரி நேற்று (22) திங்கட்கிழமை மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக அடையாள கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
மாந்தை மேற்கு பகுதியில் உள்ள சோழ மண்டலம் குளத்தின் கீழ் 30 வருடங்களுக்கு மேலாக அரசாங்க அனுமதியுடன் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த அந்தோனியார்புரத்தைச் சேர்ந்த மக்களுக்கு நபருக்கு தலா இரண்டு ஏக்கர் காணி வீதம் வழங்குவதாகவும் அதன் ஊடக வாழ்வாதாரச் செயற்பாடுகளை முன்னெடுக்க உதவுவதாகவும் அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாக்குறுதியை அடிப்படையாக கொண்டு மக்கள் எந்த ஒரு காணி ஆவணங்களும் இன்றி பல வருடங்களாக அப்பகுதியில் வாழ்வாதாரச் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தனர்.
இவ்வாறான நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக குறித்த காணிகளை அந்தோனியார்புர மக்களுக்கு வழங்காது வெளிநாட்டை சேர்ந்த நபர் ஒருவர் உள்ளடங்கலாக வவுனியா, கொழும்பு பகுதிகளை சேர்ந்த செல்வந்தர்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு குறித்த நபர்களால் காணிகளை பண்படுத்து செயற்பாடும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான காணியை தாங்கள் பூர்வீகமாக பயன்படுத்திய காணியை தங்களுக்கு வழங்காது வெளிநாட்டைச் சேர்ந்த நபர்களிடமும், பணம்படைத்தவர்களிடம் பணம் பெற்று கொண்டு காணி சீர்திருந்த ஆணைக்குழுவினர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது.
போராட்டத்தின் இறுதியில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரனிடம் போராட்டக்காரர்கள் கையளித்தனர்.
இவ்வாறான காணி தொடர்பான பிணக்குகளை நீண்ட நாட்கள் முடிவுறுத்தாமல் வைத்திருக்க முடியாது எனவும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பலருக்கு காணி இல்லாத நிலையில் வேறு மாவட்டத்தையும் வெளிநாட்டையும் சேர்ந்தவர்களுக்கு காணி வழங்குவதை ஏற்க முடியாது எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)