கடலரிப்பு

அம்பாறையின் கரையோர பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருகின்றனர். அத்துடன், அங்குள்ள மீனவர்களும், தொழில் நடவடிக்கைகளில் பேரிடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மருதமுனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில், பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேக அதிகரிப்பு, காற்றின் திசை மாற்றம், நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம், வழமைக்கு மாறான கடல் நீரின் குளிர்ச்சி, கடல் அலைகளின் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அப்பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறையில் ஒலுவில் தொடங்கி நிந்தவூர், காரைதீவு வரையிலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பால் 400 மீற்றர் தூரம் வரையிலான நிலப்பகுதிக்குள் கடல் நீர் புகுந்துள்ளதாலும், கடந்த சில தினங்களாக கடலரிப்பு ஏற்பட்டு வருவதாலும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காரைதீவு, நிந்தவூர் கரையோர பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் கடலரிப்பினை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எனினும், அம்பாறையின் கரையோர பிரதேசங்களில் கடலரிப்பு தீவிரமடைவதற்கு ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே பிரதான காரணம் என அந்தப் பிரதேச மக்கள் நீண்ட காலமாக குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடலரிப்பு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)