உலக தன்னாதிக்க தினத்தை மீனவர்கள் நினைவு கூற முடியாத நிலையில் வட மாகாண மீனவ இணைய செயலாளர் ஜி.சங்கர்.
உலக தன்னாதிக்க தினத்தை மீனவர்கள் நினைவு கூற முடியாத நிலையில் வட மாகாண மீனவ இணைய செயலாளர் ஜி.சங்கர்.

ஜி.சங்கர்

உலக தன்னாதிக்க தினத்தை கொண்டாடும் இந்த வேளையில் மீனவ சமூகம் மற்றும் இலங்கை வாழ் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். இந்த நிலையிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டுமானால் அரசே இதற்கு வழி சமைக்க வேண்டும் என வட மாகாண மீனவ இணைய செயலாளரும் பனங்கட்டுகொட்டு மீனவ கூட்டுறவு சங்க முகாமையாளருமான ஜி.சங்கர் இவ்வாறு தெரிவித்தார்.

உலக தன்னாதிக்க தினத்தை முன்னிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பு புதன் கிழமை (13.10.2021) மன்னார் மாவட்ட மீனவ சமாஜ மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது வட மாகாண மீனவ இணைய செயலாளரும் பனங்கட்டுகொட்டு மீனவ கூட்டுறவு சங்க முகாமையாளருமான ஜி.சங்கர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;

ஒக்டோபர் மாதம் 10 ந் திகதி தொடக்கம் 16 ந் திகதி வரை உலக தன்னாதிக்க தினமாக கொண்டாடப்படுகின்றது.

இந்த உலக தன்னாதிக்க தினத்திலே எமது மீனவ சமூகமும் இலங்கை வாழ் மக்களும் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டு வரும் விலை அதிகரிப்பால் மக்கள் எவ்வாறு வாழப் போகின்றார்கள் என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது.

அன்மையில் வல்வட்டித்துறையிலும், பருத்திதுறையிலும் கடலில் இந்திய இலுவைப்படகுகள் அத்துமீறி நுழைந்து எமது கடல் வளங்களை மட்டுமல்ல எமது மீனவர்களின் வலைகளையும் நாசம் செய்துள்ளன. இதனால் இம் மீனவர்களுக்கு இந்திய மீனவர்கள் பல கோடி ரூபாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி சென்றுள்ளனர். இந்த நிலையில் எமது மீனவர்கள் எவ்வாறு உலக உணவு தன்னாதிக்கத்தை தங்கள் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வது என்பது கேள்விக் குறியே.

-அன்று வல்வெட்டித்துறையிலும் பின் பருத்தித்துறையிலும் நடைபெற்ற இச் சம்பவமானது அடுத்து நிகழப்போவது மன்னார் மாவட்டத்திலேயே ஆகும்.

-ஏற்கனவே மன்னார் பகுதியில் இந்திய இலுவைப்படகுகள் எமது கடல் வளத்துடன் எமது மீனவர்களின் மீன்பிடி வலைகளை நாசமாக்கி பல கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டே வருகின்றார்கள்.

-இந்த நிலையில் நாட்டின் விலைவாசி உயர்வு காரணமாக எமது மீனவ சமூகம் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். அதாவது முன்பு ஆயிரம் ரூபாவுக்கு வாங்கிய ஒரு வலைத்துண்டு தற்பொழுது இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாவாக உயர்ந்துள்ளது.

அத்துடன் எரிபொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் எமது நாட்டிலும் அங்கிகரிக்கப்படாத மீன்பிடி முறையால் எமது மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்றே மீன்பிடியில் ஈடுபடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக எரிபொருள் பாவனையும் அதிகரித்து வருகின்றது. ஆனால் பிடிபடும் மீன்களோ மிக சொற்பமாகவே காணப்படுகின்றது.

-இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமான நிலைக்க தள்ளப்பட்டு வருகின்றன.

-ஆகவே அரசானது இலங்கை வாழ் மீனவ சமூகத்தையும் மக்களையும் இப் பிரச்சனைகளிலிருந்து மீட்டெடுத்து உலக உணவு தன்னாதிக்க தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தன்மைக்கு வழி சமைக்க வேண்டும் என்று இந்தவேளையில் வேண்டி நிற்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

உலக தன்னாதிக்க தினத்தை மீனவர்கள் நினைவு கூற முடியாத நிலையில் வட மாகாண மீனவ இணைய செயலாளர் ஜி.சங்கர்.

வாஸ் கூஞ்ஞ