
posted 3rd August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
இலங்கைக்கு இராணுவ ரீதியில் உதவி வழங்க சீன அரசு தயார்
இலங்கை தனது இறைமை, ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு இராணுவ ரீதியிலான உதவிகளை வழங்க தயார் என சீனா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான சீன தூதுவர் கி சென்ஹொங் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் புவிசார் அரசியல் நகர்வுகள் அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்ற ஒரு சூழ்நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை இராணுவத்துக்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்குவதற்கு சீனா தயாராகவுள்ளது எனவும் தூதுவர் குறிப்பிட்டார்.
எங்கள் இரு நாடுகளினதும் இராணுவத்தினர் இடையிலான உறவுகள் காலத்தால் சோதிக்கப்பட்டவை என சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மரபுசார் மரபுசாராத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றது என தெரிவித்துள்ள சீனத் தூதுவர், எப்போதும் போல இலங்கையின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு என்பவற்றை பாதுகாப்பதற்கு இலங்கையின் ஆயுதப் படையினருக்கும், மக்களுக்கும், சீன மக்களும் இராணுவத்தினரும் உறுதியான ஆதரவை வழங்குவார்கள் என கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், உயர்மட்ட வருகைகள், உபகரண ஒத்துழைப்பு, பணியாளர்கள் பயிற்சி மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற துறைகளில் நமது இரு ஆயுதப் படைகளுக்கும் இடையிலான பரிமாற்றங்களும், ஒத்துழைப்பும் ஆழமடைந்து வருகின்றன என சீன தூதுவர் தெரிவித்தார்.
8 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான பல்வேறு வகையான தொடர்பாடல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உபகரணங்கள் இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு வருடமும் அனைத்து தரத்திலான அதிகாரிகள் மற்றும் பல்வேறு வகையான துருப்புக்களுக்கு இடைவிடாத பயிற்சிகளை வழங்குவதன் மூலம் இலங்கை ஆயுதப் படைகளின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதில் சீனா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. எதிர்காலத்தில், இலங்கையின் இராணுவத்தை எங்களால் இயன்றவரை மேம்படுத்துவதற்கு நாங்கள் தொடர்ந்து உதவுவோம் என சீன தூதுவர் மேலும் கூறினார்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)