
posted 7th May 2022
பிரதி சபாநாயகர் பதவியிலுருந்த விலகத் தீர்மானம்
பிரதி சபாநாயகராக நேற்று முன்தினம் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சிதிலிசியம்பலாப்பிட்டிய, மீண்டும் குறித்த பதவியிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளாரெனப் பிரதி சபாநாயகரின் ஊடகச் செயலாளர் தெரிவித்தார்.
பாராளுமன்றில் பிரதி சபாநாயகர் பதவிக்காக போட்டியிட்ட அவர் 148 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இதற்கு முன்னதாக, பிரதி சபாநாயகராக செயல்பட்ட கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இரு வாரங்களுக்கு முன்னதாக பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகுகிறார் என அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், அவரின் இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 4 நாட்களுக்கு முன்னதாகவே ஏற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதியவர் மயங்கி விழுந்து மரணம்
வடமராட்சி, பருத்தித்துறை - கிராமக்கோடு பகுதியில் வீதியால் நடந்து சென்றபோது மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை கிராமக்கோடு பகுதியில் வீதியால் நடந்து சென்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.
வியாழக்கிழமை (05) மதியம் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து அவர் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
அவசர சிகிச்சை பிரிவில் வைத்துச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்றுக் காலை 6 மணியளவில் அவர் உயிரிழந்தார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
இவ்வாறு உயிரிழந்த முதியவர் குறித்து எதுவித தகவல்களும் தெரியாது எனவும் இதுவரை உரியவர்கள் எவரும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
அரசு விலகவேண்டும் என்று 2000 மேற்பட்ட தொழிற்சங்கங்களின் போராட்டம் வெற்றி
ஒன்றிணைந்த தொழில்சங்கங்களின் அழைப்பின்பேரில் வெள்ளிக்கிழமை (06) நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு வழமையைவிட வடக்கு, கிழக்கு மாகாணங்களும் முழுமையாக ஆதரவளித்தன.
நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும், அரசாங்கம், ஜனாதிபதி ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி நேற்றைய தினம் ஹரத்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சுகாதாரம், கல்வி, போக்குவரத்து நிர்வாக சேவை, பொதுச்சேவை உள்ளிட்ட 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்சங்கங்கள் மற்றும் வர்த்தகர் சங்கங்கள், வங்கிகள், போக்குவரத்து சேவை சங்கங்கள், பொது அமைப்புக்கள் என்பனவும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவைத் தெரிவித்திருந்தன.
இதனால் நேற்று நாடுமுழுவதும் பாடசாலைகள், அரச சேவைகள், வங்கிச் சேவைகள், பொதுச் சேவைகள், சுகாதார சேவைகள் என்பன முற்றாக முடங்கின. வணிக, பொதுச் சந்தை நடவடிக்கைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தன. பொதுப் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தமையால் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களும் மக்கள் நடமாட்டமின்றி முடங்கிப் போய்க் காணப்பட்டன. எனினும், இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் மட்டும் வழமைபோல் சேவையில் ஈடுபட்டன.
இதேசமயம், கடையடைப்பு போராட்டங்களுக்கு ஆதரவாக முக்கிய நகரங்கள் அனைத்திலும் ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
இதேசமயம், வழக்கமான போராட்டங்களை விட நேற்றைய தினம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பூரண ஆதரவு வழங்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)