
posted 10th August 2024
உறவுகளின் துயர் பகிர்வு
அமைச்சு பதவிகளை இழக்கவுள்ள ஹரின், மனுஷ
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோரைக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபூர்வமாக செல்லுபடியாகும் என உயர்நீதிமன்றம் நேற்று (09) முக்கிய தீர்ப்பொன்றை அளித்துள்ளது.
விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வில், மனுதாரர்கள் இருவரையும் கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டப்படி செல்லுபடியாகும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக, ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்புரிமையையும், அமைச்சுப் பதவிகளையும் இழக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர் ஐக்கிய மக்கள் தம்மை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியதை எதிர்த்து இரண்டு தனித்தனியான வெளியேற்ற மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
கடந்த வருடம், ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார மீது விதித்த தடையை நீக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்திருந்தது.
குறித்த இருவரும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு கட்சியின் செயற்குழுவினால் தடை விதிக்கப்பட்டது.
எனினும், இருவரும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டதையடுத்து, அந்த தடை நீக்கப்பட்டது.
இதன் பின்னர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது.
கடந்த வருடம் மே மாதம் 20ஆம் திகதி, அவர்களது கட்சி உறுப்புரிமையும் ரத்துச் செய்யப்பட்டது.
குறித்த இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் நிலையில், அரசாங்கத்தில் இணைந்த நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது.
இதன் பின்னர் கட்சியில் இருந்து நீக்கி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்வதற்கான ஐக்கிய மக்கள் சக்தியின் இந்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கட்சி யாப்பின் பிரகாரம் அதன் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது கட்சியின் செயற்குழுவிற்குரிய பொறுப்பு என்றும் இது கட்சித் தலைவருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட ஒன்றல்ல என்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
எனவே சஜித் பிரேமதாஸவின் இந்த தீர்மானம் கட்சியின் விதிகளின்படி அரசியலமைப்புக்கு முரணானது எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
நீதியரசர்களான விஜித் மலல்கொட அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணை இடம்பெற்றதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நேற்று இடம்பெற்ற விசாரணையில் இந்த முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மனுஷ நாணயக்கார சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவும், ஹரின் பெர்னாண்டோ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவும், ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கொரியா, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் சார்பில் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் சம்பத் விஜேவர்தன ஆகியோர் ஆஜராகினர்.
எமது தேனாரம் செய்திகளை, எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எம்.பி., அமைச்சு பதவிகளை இழக்கவுள்ள ஹரின், மனுஷ