விழிப்புணர்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

தற்கொலை முயற்சிகளில் இருந்து பொதுமக்களை மீட்டெடுக்கும் வகையில் மாற்றத்திற்கான பாதை பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் "தற்கொலை முயற்சிகளை தடுத்து நிறுத்துவோம்" எனும் தொனிப்பொருளிலிலான விழிப்புணர்வு நிகழ்வானது கல்லடி பால முன்றலில் இடம்பெற்றது.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள் தெரிவிக்கின்றன. இத்தகைய மரணங்கள் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு இதன் விளைவாக பலர் மன ரீதியான அழுத்தங்களுக்கும் உள்ளாகி வருவதாகவும் கூறப்படுகின்றது.

அதிதிகளின் வரவேற்புடன் ஆரம்பமான இந் நிகழ்வில் மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம் எனபன இடம்பெற்றதனைத் தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரையுடன் தற்கொலைகள் தொடர்பான விளக்கவுரைகள் மற்றும் அதிதிகளின் சிறப்புரைகள் என்பனவும் இடம்பெற்றன.

அத்துடன் நிகழ்வின் விசேட அம்சமாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் தற்கொலைகளும், அதற்கான தீர்வுகளும் பற்றி பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட வீதி நாடகமும் கல்லடி பழைய பால முன்றலில் அரங்கேற்றப்பட்டது.

இந் நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க. சத்தியசீலன் கோரளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஷோபா ஜெயரஞ்சித், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் உ. சிவராஜா, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மகளீர் அணி செயலாளர் சுசிகலா அருள்தாஸ், மட்டக்களப்பு மாவட்ட சென். ஜோண்ஸ்‌ அம்புலன்ஸ் படையணியின் தலைவர் தேசமானிய அல்ஹாஜ் மீராசாகிப் உள்ளிட்டவர்களுடன் உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள், மாற்றத்திற்கான பாதை அமைப்பின் அங்கத்தவர்கள், மாவட்ட பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புகளின் தலைவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

விழிப்புணர்வு | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)