சாய்ந்தமருது பொலிவேரியனில் மையவாடி அமைக்க கல்முனை மாநகர சபையில் தீர்மானம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

சாய்ந்தமருது பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வீடு, வாசல்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக கரைவாகுப்பற்று வயல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிவேரியன் வீட்டுத் திட்டத்தில் குடியிருக்கும் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக மையவாடி ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் 55ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் இடம்பெற்ற போது சாய்ந்தமருது சுயேட்சைக் குழு உறுப்பினரான ஏ.ஆர்.எம். அஸீம் இதற்கான பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.

இதன்போது கருத்துரைகையில் அவர் கூறியதாவது;

இவ் வீட்டுத் திட்டத்தில் சுமார் 600 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஆனால், இப்பகுதியில் இதுவரை மையவாடி ஒன்று அமைக்கப்படாத காரணத்தினால் சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு தொலைவிலுள்ள மையவாதிகளுக்கு ஜனாஸாக்களை கொண்டு சென்று, அடக்கம் செய்வதில் இம்மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால் இப் பகுதிக்கென தனியான மையவாடியொன்று அமைக்கப்பட வேண்டும் என்கிற அவசியம் உணரப்பட்டிருக்கிறது. அங்கு வாழ்கின்ற மக்கள் இதனை வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக 02 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி, ஒதுக்கித் தருவதற்கு எமது பிரதேச செயலகம் தயாராக இருக்கிறது. ஆகையினால், எமது மாநகர சபை இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இதையடுத்து மாநகர முதல்வர் முன் வைத்த ஆலோசனையும், அறிவுறுத்தல்களும் உள்வாங்கப்பட்டு மையவாடி அமைப்பதற்கான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அத்துடன், சாய்ந்தமருது பிரதேசத்தில் விலங்கறுமனையொன்றை அமைப்பதற்காக அடையாளம் காணப்பட்டிருக்கின்ற காணியை கல்முனை மாநகர சபைக்கு விடுவித்துத் தருமாறு பிரதேச செயலாளரைக் கோரும் தீர்மானமும் இதன்போது நிறைவேற்றப்பட்டது.

இவை தவிர மற்றும் பல முக்கிய விடயங்கள் குறித்த விவாதங்களும் இந்த அமர்வில் இடம்பெற்றன. அத்துடன் கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பான புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள முஹம்மது அலியார் கலீலுர் ரஹ்மான் இதன்போது தனது கன்னியரையை நிகழ்த்தினார்.

சாய்ந்தமருது பொலிவேரியனில் மையவாடி அமைக்க கல்முனை மாநகர சபையில் தீர்மானம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)