சட்டவிரோத மீன்பிடி முறைகள் நிறுத்தப்பட வேண்டும் - இல்லையேல் மாபெரும் போராட்டத்தில் குதிப்போம் - அன்னராசா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

வடக்கில் சட்டவிரோத மீன்பிடி முறைகள் நிறுத்தப்படாவிட்டால் வட மாகாணத்தை முடக்கி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என யாழ். மாவட்டக் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னராசா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

முல்லைத்தீவில் இடம்பெற்ற மீனவர்களின் போராட்டமானது ஒரு நியாயமான போராட்டம். அந்தப் போராட்டத்துக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். குறித்த போராட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து வந்த குழு ஒன்று அவர்களது கோரிக்கை தொடர்பில் ஆராய்ந்து அமைச்சு மட்டத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி தீர்வு வழங்கும் என ஏற்கனவே அறிவித்திருந்தார்கள்.

எதிர்வரும் 12ஆம் திகதி மீனவர்களுக்கு சார்பாக தீர்வு வராவிட்டால் வடக்கு மாகாணத்தை முடக்கிப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத மீன்பிடித் தொழில்களை நிறுத்துவதற்குரியவாறு கடற்றொழில் அமைச்சரின் தீர்மானம் அறிவிப்பு இடம்பெறவேண்டும்.

அவ்வாறு இடம்பெறாத பட்சத்தில் வடக்கு மாகாணம் முழுவதிலும் மீனவர்கள் ஒன்றிணைந்து மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

சட்டவிரோத தொழிலை கட்டுப்படுத்துவதற்கு பொறுப்பாக இருக்கின்ற கடற்படையினர் மற்றும் அரச அதிகாரிகள் இன்னும் கட்டுப்படுத்தவில்லை. சட்டம் பலமாக உள்ளது. ஆனால் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமையால் அதை நடைமுறைப்படுத்துமாறு முல்லைதீவு மீனவர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டபோது சட்டவிரோதமான தொழிலை மேற்கொள்வோரும் இந்த போராட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுகின்றார்கள்.

அவர்களது நியாயமற்ற கோரிக்கைக்கு செவி சாய்ப்பதாகவே அரசாங்கம் இருக்கின்றது. முல்லைதீவில் சட்டவிரோத தொழில் செய்பவர்கள் நியாயமான தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக போராடியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இனிவரும் காலங்களில் சட்டவிரோத தொழிலாளர்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்தோடு சட்டம் சரியாக நடைமுறைப்பட்டிருந்தால் இந்த சட்ட விரோத தொழில்கள் இடம்பெறாது. வடக்கு மாகாண கடற்படைத் தளபதிக்கு மீனவ சமூகங்கள் சார்பில் ஒரு கோரிக்கை முன்வைக்கின்றோம். இந்த சட்டவிரோத தொழில்களை நிறுத்தவேண்டிய பொறுப்பு கடற்படையினருக்கு உள்ளது. எனவே சட்டத்தினை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கையை நீங்கள் முன்னெடுக்க வேண்டும் என்றார்.

சட்டவிரோத மீன்பிடி முறைகள் நிறுத்தப்பட வேண்டும் - இல்லையேல் மாபெரும் போராட்டத்தில் குதிப்போம் - அன்னராசா | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)