குருந்தூர்மலை தொடர்பாக நீதிமன்றத்தை மீறிய ஆதாரங்கள் சமர்ப்பணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

முல்லைத்தீவு குருந்தூர்மலை தொடர்பாக வழக்கிலக்கம் AR/673/18 இல் தொடரப்பட்டுள்ள வழக்கில், கடந்த ஜூன் 16ஆம் திகதிக்கு முன்னிருந்த நிலையை பேணுமாறும், அதற்குமேல் கட்டுமானப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதிமன்றம் ஜூன் 19ஆம் நாளன்று கட்டளை பிறப்பித்திருந்தது.

இந்தநிலையில் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் கடந்த செப்ரெம்பர் 22ஆம் நாளன்று முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்றபோது, நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையானது மீறப்பட்டதாகவும், அவ்வாறு மீறப்பட்டதாலேயே கடந்த செப்ரெம்பர் 21 அன்று தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதாகவும், குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பான சட்டத்தரணிகள் புகைப்பட ஆதாரங்களையும் நீதிமன்றிலே சமர்ப்பித்தனர்.

அதனடிப்படையில் அவ்வாறு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகள் மீறப்பட்டனவா என்பது தொடர்பில் பொலிஸார் மற்றும் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர் (நேற்று) ஒக்ரோபர் 13ஆம் திகதி மன்றில் தோன்றி விளக்கமளிக்க வேண்டுமென முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்தவகையில் நீதிமன்றின் உத்தரவை ஏற்று நேற்று தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் அனுர மானதுங்க நீதிமன்றில் முன்னிலையானதுடன், தொல்லியல் திணைக்களம் சார்பில் சட்டமா அதிபர் திணைகள பிரதி சொலிசிட ஜெனரல் உள்ளிட்ட சட்டத்தரணிகளும் முன்னிலையாகியிருந்தனர்.

அத்தோடு, பொலிஸார் மற்றும் குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் சார்பான சட்டத்தரணிகளும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

இந் நிலையில் குறித்த வழக்கு விசாரணைகள் நீதிவான் ரி. சரவணராஜா முன்னிலையில் இடம்பெற்றதுடன், இரு தரப்பினரும் தமது சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் செவிமடுத்ந நீதிவான், இதுதொடர்பில் கட்டளை ஒன்றை வழங்குவதற்காக எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு குறித்த வழக்கைத் திகதியிட்டுள்ளார்.

குருந்தூர்மலை தொடர்பாக நீதிமன்றத்தை மீறிய ஆதாரங்கள் சமர்ப்பணம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)