அரசியல் இலாபங்களுக்காக மக்களைக் குழப்புவதை உடன் நிறுத்துங்கள் - விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices
அரசியல் இலாபங்களுக்காக மக்களைக் குழப்புவதை உடன் நிறுத்துங்கள் - விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

யாழ் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர்

"அரசியல் தேவைகளுக்காக - அரசியல் இலாபங்களுக்காக மதவாதங்களைத் தூண்டி மக்களைக் குழப்பி மதங்களுடையில் பிரச்சினைகளைத் தூண்டிவிடும் செயற்பாட்டை உடன் நிறுத்துங்கள்."

- இவ்வாறு யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் தெரிவித்தார்.

யாழ். ஆரியகுளம் பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளது என ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

"நான் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் ஆரியகுளம் அபிவிருத்தி சம்பந்தமாகவும் அதில் புத்த விகாரை அமைக்க முயற்சி என்ற செய்தியையும் பார்த்தேன். அந்தச் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை.

நாக விகாரைக்கு அண்மையில் சுற்றுலா மையத்தை அமைப்பது தொடர்பில் எனது அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றேன்.

குறித்த அபிவிருத்தி தொடர்பில் எம்முடன் கலந்தாலோசிக்கபடவில்லை. இது ஒரு புனித பூமி. இந்தக் குளத்தில் சுற்றுலா ஹோட்டலை குளத்தின் நடுவில் அமைப்பதை நிறுத்தி இந்து மற்றும் ஏனைய மதத்தவர்கள் ஒன்றிணைந்து செயற்படக் கூடியவாறு ஒரு நல்லிணக்க மண்டபம் ஒன்றை அமைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன்.

ஆனால், குறித்த பத்திரிகையில் நாம் புத்தர் சிலை அமைக்கப் போகின்றோம் எனச் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். நாங்கள் அவ்வாறு ஒன்றும் செய்வதற்கு எண்ணவில்லை. ஒரு தியான மண்டபமாக மாற்றுவதற்குத்தான் யோசித்துள்ளோம்.

புனித பிரதேசம் என்பதால் குளத்தின் நடுவில் ஒரு தியான மண்டபத்தை அமைத்தால் அது அனைத்து மதத்தினருக்கும் உதவியாக இருக்கும் என்பது எமது நிலைப்பாடு.

இந்து மதமும் பௌத்த மதமும் சர்வமத குழுவாக இணைந்து யாழில் ஒற்றுமையாகச் செயற்பட்டு வருகின்றோம். விசேடமாக ஆரியகுளம் பகுதியில் அண்மையில் சைவ ஆலயம் உள்ளது. அதேபோல் அண்மையில் பௌத்த விகாரையும் உள்ளது.

இந்து மக்கள், வேறு மத மக்கள் என்று பார்க்காது அனைவரும் இணைந்து செயற்படுகின்றோம்.

நாக விகாரை நுழைவாயிலில் பார்த்தால் தெரியும். இந்துமத தெய்வங்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகளும் இடம்பெறுகின்றன.

இந்து மதத்தில் முழுமுதல் கடவுளின் சிலையும் வைக்கப்பட்டு பூஜை வழிபாடு இடம்பெறுகின்றது. நாம் கூறுவது என்னவென்றால் இந்தப் பகுதியை ஒரு புனித பிரதேசமாக மாற்ற வேண்டும்.

விகாரையுடன் சம்பந்தப்பட்ட குளம் என்பதால் எம்முடனும் கலந்தாலோசித்திருக்கலாம். ஆனால், அவ்வாறு இடம்பெறவில்லை. யாழ். மாநகர மேயரை நேரில் கண்டபோது ஏன் குள அபிவிருத்தி தொடர்பாக எம்முடன்
கலந்துரையாடவில்லை எனக் கேட்டேன். தற்போது கொரோனா சூழ்நிலை காரணமாக தாங்கள் யாருடனும் கலந்துரையாடவில்லை என்று அவர் கூறினார்.

எனவே, நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். சுற்றுலா மையமாக மாற்றினால் இது ஒரு புனித பிரதேசமாக இருக்காது. எனவே, இந்து - பௌத்த நல்லிணக்க மண்டபம் ஒன்றை அமைக்குமாறு நான் மேயரிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றேன்.

நாங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து மதத்தவர்களுடனும் இணைந்து செயற்படுகின்றோம். நேற்றுக்கூட அனைத்து மதத் தலைவர்களும் இணைந்து பூஜை வழிபாட்டில் கலந்துகொண்டோம். எனவே, யாழ். மாவட்டத்தில் அனைத்து மதத்தவர்களும் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம்.

சிலர் தமது அரசியல் தேவைகளுக்காக மதவாதங்களைத் தூண்டி மக்களைக் குழப்பி விட யோசிக்கின்றார்கள். மக்களைத் தூண்டி விடுகின்றார்கள். எனவே, இதனை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். நாங்கள் இந்த நாட்டில் நல்லிணக்கத்தோடு சமாதானமாக வாழ முயற்சிக்கின்றோம். எனவே, ஒரு சிலரின் அரசியல் இலாபங்களுக்காக மதங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தூண்டிவிடும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும்" - என்றார்.

அரசியல் இலாபங்களுக்காக மக்களைக் குழப்புவதை உடன் நிறுத்துங்கள் - விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன்