குவைத் நிதியில் வீட்டுத்திட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

அம்பாறை மாவட்டத்திலுள்ள மிகவும் பின்தங்கிய குடியேற்றக் கிராமமான குடுவில் பகுதியில் குவைத் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 40 வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அந்நாட்டுத் தூதுவர் ஹலாஃப் பு தாய்ர், கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் கல்முனைப் பிராந்தியத்தின் முன்னேற்றத்திற்கு உதவுவதற்கும் குவைத் தூதுவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் புதன்கிழமை (08) இடம்பெற்ற சந்திப்பின்போது பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் விடுத்த வேண்டுகோளையேற்றே தூதுவர் மேற்படி விடயங்களுக்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

இச்சந்திப்பின்போது நாட்டில் நிலவும் சமகாலப் பிரச்சினைகள் மற்றும் கல்முனைப் பிரதேசத்திலுள்ள தேவைப்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்த பிரதி முதல்வர், தனது பிராந்தியத்துக்கு உதவிகளை மேற்கொள்ளுமாறு தூதுவரிடம் கேட்டுக்கொண்டார். தன்னால் இயலுமான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக தூதுவர் இதன்போது உறுதியளித்தார்.

முன்னாள் அமைச்சரும் குவைத், பஹ்ரைன் நாடுகளின் முன்னாள் தூதுவருமான தனது தந்தை ஏ.ஆர்.மன்சூர் பெயரில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 900 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஞாபகார்த்த மண்டபம், கல்முனை முஹையத்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் உள்ளிட்ட பல அபிவிருத்திப் பணிகளுக்கு குவைத் அரசாங்கம் நிதியுதவி வழங்கியதை நினைவுகூர்ந்து, பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் இதன்போது நன்றி பாராட்டினார்.

இதன்போது, தனது நினைவுப் பேழையில் வைத்திருந்த ஏ.ஆர். மன்சூருடனான புகைப்படத்தை காண்பித்து இருவருக்குமிடையிலான தொடர்புகளை சிலாகித்துப் பேசிய தூதுவர், அப்போதைய நெகிழ்ச்சியான தருணங்களையும் இதன்போது பகிர்ந்து கொண்டார்.

அத்துடன் காலஞ்சென்ற முன்னாள் தூதுவரான அப்துல்லாஹ் நஸீர், ஞாபகார்த்தமாக நினைவேட்டில் ரஹ்மத் மன்சூர் தனது குறிப்புகளை பதிவு செய்தார். இச்சந்திப்பில் குவைத் தூதரகத்தின் சமூக, நலன்புரி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் முஹம்மட் பிர்தெளஸும் கலந்து கொண்டார்.

குவைத் நிதியில் வீட்டுத்திட்டம் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)