அரச படைகளின் தாக்குதல் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டுப் பதிவுகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையை எதிர்த்து நடத்தப்பட்ட அமைதி வழி போராட்டக்காரர்கள் மீது அரச படைகளின் தாக்குதல் மற்றும் அதன் பின்னான கைது நடவடிக்கையை அடுத்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நேற்று (30) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா ஊடாக நேற்று திங்கட்கிழமை (30) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

கடந்த தைப் பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட தேசிய தைப் பொங்கல் நிகழ்வுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஏற்பட்ட கலவரத்தில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதன்போது சிலருக்கு காயங்களும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்தனர் என போராட்டகார்களில் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து வேலன் சுவாமிகளை முதற்கட்டமாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி பிணையில் விடுவித்திருந்தனர்.

இதன் வழக்கு விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலைமையில் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்கள் தம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தியும் நேற்று முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச படைகளின் தாக்குதல் - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டுப் பதிவுகள் | Thaenaaram |  Tamil Obituary Notices | Remembrance Notices | Tamil Death Notices

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)