
posted 5th March 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் கிட்டத்தட்ட 50 பாடசாலைகள் மூட வேண்டி வரும் என கணிப்பு ஒன்று செய்யப்பட்டுள்ளது என சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.
உரும்பிராய் ஞானவைரவர் சமூக அறக்கட்டளை சார்பில் உரும்பிராய் பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (04) சனிக்கிழமை உரும்பிராயில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு - கிழக்கு பகுதிகளில் இருக்கும் பெரிய பிரச்னை சனத்தொகை குறைந்துள்ளமை. அதனால் இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் கிட்டத்தட்ட 50 பாடசாலைகள் மூடவேண்டி வரும் என கணிப்பு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
புங்குடுதீவு, வேலணை மற்றும் அனலைதீவு போன்ற பகுதிகளில் பாடசாலைகளானது மூடப்பட்டு வருகின்றன. போதாக்குறைக்கு தீவகத்தில் இன்டர்நஷனல் பாடசாலை ஒன்றினை பெரிய அளவில் ஏற்பாடு செய்து மதம் சார்ந்த பாடசாலை ஆக அனைவரையும் ஈர்க்கின்றார்கள்.
ஏற்கனவே உள்ள பாடசாலைகளின் கதவு மூடப்படுகின்ற தறுவாயில் இன்டர்நஷனல் பாடசாலை திறக்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் தனியாரை தட்டிக் கேட்பதற்கு யாரும் இல்லாத நிலை காணப்படுகிறது.
அறச் சிந்தனையுடன் ஆரம்பிக்கப்படுகின்ற இவ் அறக்கட்டளை முதலாவது கட்டத்தில் 50 லட்சத்துக்கு மேல் பணி செய்து உள்ளீர்கள்.
அடுத்த கட்டங்களில் இப்பகுதிகளில் மூடு நிலையில் உள்ள பாடசாலைகளை மூடாமல் செய்ய என்ன வழி? அத்துடன் மருத்துவ உதவி, சமூகத்திற்கான அவசிய தேவைக்குரிய உதவி என அனைத்தையும் பகுதி பகுதிகளாக பிரித்து வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு எதை செய்ய விருப்பமோ அவர்கள் அதை அபிவிருத்தி செய்யலாம்.
யாழ்ப்பாணத்தில் இருந்த அறக்கட்டளைகள் பல பேணுவாரற்று கைவிடப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் செவ்வாய்கிழமை மடம், வெள்ளிக்கிழமை மடம், அன்ன சத்திர மடம் மற்றும் கீரிமலையில் இருந்த மடம் ஒன்றுக்கும் கோடிக்கணக்கில் அறக்கட்டளையில் பணம் இருந்தது. இப்பொழுது அந்தப் பணம் எங்கே என்று தெரியாது.
சைவ பரிபாலன சபை வெளியிடும் இந்து சாதனம் எனும் பத்திரிகையில் அறக்கட்டளைகளின் விவரம், அதற்காக விடப்பட்ட நிலங்களின் தொகையும் அதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அது 1917 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்த அறக்கட்டளைகள் தொடர்பானது. இன்று அவை இருந்த இடங்களுக்கு தெரியாது, மடங்களும் இல்லை. அவ்வாறாக அதைத் தேடிப் பார்த்தால் அங்கெல்ஸாம் கொத்து ரொட்டி கடைகள் உள்ளன.
யாழ்ப்பாணத்துக்கு வந்த ஆபத்து அறத்தை சரியாக பேணாத காரணத்தால் கர்ம வினைகளை அனுபவிக்கின்றோம்.
யாழ்ப்பாணத்தில் இருபாலைச் சந்தியிலிருந்த செவ்வாய்க்கிழமை மடத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அன்னதானம் இடம்பெறும்.
ஆகவே அறக்கட்டளைகள் நீண்ட ஆயுளோடு இருக்க சிறந்த வாய்ப்புகளை உருவாக்கவேண்டும்.
23 வருடங்களாக சிவபூமி அறக்கட்டளை, இரண்டு பாடசாலை, இரண்டு முதியோர் இல்லம் மற்றும் ஆசிரமங்கள் ஐந்து போன்றவற்றை நடத்தி வருகின்றோம். புலம்பெயர் சமூகமானது இவ்வாறான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
உரும்பிராய் இந்து கல்லூரியை பாதுகாக்கவேண்டும். ஏனெனில் அது வரலாறு படைத்த பாடசாலை. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடாதிபதியாக இருந்த பேராசிரியர் கணேசலிங்கம் இறப்பதற்கு முன் அதனை எவ்வாறு ஆயினும் காப்பாற்றவேண்டும் என என்னிடம் கூறி கவலை அடைந்தார்.
இஸ்லாமியர்களின் அறக்கட்டளையே இன்று இலங்கையில் உச்சக் கட்டத்தில் உள்ளது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)